Sunday, July 4, 2021

ஓநாய்களுக்கு எச்சரிக்கை

ஓநாய்களை இனங்கண்டுகொள்ள நல்ல தருணத்தை ஏற்படுத்திய கர்த்தருக்கு நன்றி. மக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது. வேத வசனத்திலும் நீதியிலும் புரட்சி எழும்பாவிடில் அனைத்தும் சூறையாடப்படும்.. ஆம்.. அனைத்தும்... முட்டு கொடுத்தே வாழ்ந்து பழகிய விசுவாசிகளே, நாளை அந்திக்கிறிஸ்துவுக்கும் முட்டு கொடுக்க வேண்டி வரலாம். 

எதிர்ப்பு சக்தி இல்லாத விசுவாசிகளை நினைத்து வேதனைப்படுகிறேன். எதிர்ப்பு சக்தியை இழந்தால் நோயால் தாக்கப்படுவது உறுதி. ந#ம் முற்பிதாக்கள் தங்கள் உயிரையும் மதிக்காமல் தவறான ஊழியங்களைக் களைந்து ஏற்படுத்திய நல்ல பாதையில் நடந்தவர்கள், கள்ள ஊழியர்களை உள்ளே அனுமதித்து விட்டு அடுத்த தலைமுறைக்கு எந்தப் பாதையை விட்டுச் செல்லப் போகிறீர்கள்.. 

விசுவாசிகளிடம் பணத்தை சுரண்டும் ஓநாய்கள் ஒன்று சேர்ந்து அனைவரையும் வஞ்சிக்கும் காலமிது. அனைவரும் சேர்ந்து எதிர்த்தால், தப்பித்துக் கொள்ளலாம். எதிர்ப்பது சிலர் மட்டுமென்றால் அவர்கள் மட்டும் அந்த ஓநாய்களால் சபைகளை விட்டு புறம்பாக்கப்படுவார்கள். 

ஒரே ஒரு வசனத்தை நினைவில் கொள்ளுங்கள் (இயேசு, இது போன்ற ஓநாய்களைக் குறித்து சொன்ன வசனம்): அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை. (லூக்கா 6 : 44)

#we_stand_with_jesus

Thursday, July 1, 2021

பிரபல கர்த்தருடைய ஊழியர்...

பிரபல கர்த்தருடைய ஊழியர், பணம் நிர்ணயம் செய்து அவருடைய ஆன்லைன் மீட்டிங்-ல் ஆட்களைக் கூட்டினார் என்றும் அதை கேள்விகேட்ட வாலிபனை மிரட்டும் தொனியில் பேசினார் என்பதும் இப்பொழுது சலசலப்பாக பேசப்பட்டு வருகிறது. தேவனுடைய ஊழியம் என்பது மக்கள் கட்டணம் செலுத்திப் பெறுவதல்ல என்பதற்கு இயேசுவே நமக்கு முன்மாதிரி. நம்முடைய மிஷனரி முற்பிதாக்களும் தங்களுடைய பொருட்களை எல்லாம் விற்றே இந்த ஊழியத்தை செய்தார்கள் என்பது நம் வரலாறு. ஊழியம் தாங்கப்படுவதற்கு வேதம் புதிய ஏற்பாட்டிலேயே நல்ல முன்மாதிரிகளை வகுத்திருக்கிறது. காலத்திற்கேற்றாற்போல் அவைகளில் சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் தேவ பக்தியை ஆதாயத்தொழிலாக நினைத்து செய்வது பாவம்.

ஆனால் இந்த ஒரு காரியாதைக்குறித்து எந்த ஒரு பெரிய போதகரும் கண்டித்துப் பேசவில்லை. காரணம் பண விஷயத்தில் பலரும் பெரிய உத்தமர்கள் இல்லை. ஒரு ஐ.டி. ரெய்டு விட்டால் பலரும் உள்ளே தான் இருக்க வேண்டும். சீர்திருத்தவாதிகள் போல பேசும் பலரையும் நெருங்கிச் சென்று பார்த்தல், நம்மை மனம் நோகச்செய்யும் செய்யும் பல காரியங்கள் உள்ளே இருக்கும்.
அந்த ஊழியராவது, "ஆமா, நான் என் மக்களிடம் காணிக்கை வாங்கினேன். என்ன தப்பு" என்று கேட்டார். ஆனால் நல்லவர்கள் போல பேசும் பலரும், அதிக காணிக்கை கொடுப்பவர்களை ஒரு விதமாகவும், காணிக்கை கொடுக்க முடியாதவர்களை வேறொரு விதமாகவும் நடத்துவது தேவன் மட்டுமே அறிந்த ரகசியம். காரணம் அந்தப் பொருளாசை "இருதயத்திற்குள்" இருப்பது, அவ்வளவு சீக்கிரம் வெளியே தெரியாது. உள்ளுக்குள் இருப்பதை வைத்து தீர்ப்பு செய்யும் தேவனிடம் அனைத்தையும் ஒப்படைத்து விடுவோம். தப்பித்துக்கொள்வதும், தங்களுக்கு தெரிந்த பெரிய புள்ளிகளை வைத்து அவரையே மிரட்டுவதும் அவரவர் சாமர்த்தியம்.