Saturday, October 24, 2020

Sunday vs Sabbath

Sunday vs Sabbath (என்னுடைய கருத்து)

"Sunday வேலைக்கு போகாத, கடைய திறக்காத. சர்ச் முடிச்சுட்டு வீட்டுல போயி உக்காரு"

ஆனால் இவர்களுக்கு Sabbathக்கும் Sundayக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

ஏழாம் நாள் மன்னாவை ஆறாம் நாளில் கர்த்தர் தருவார். இது இஸ்ரவேல் தேசத்துக்காக சொல்லப்பட்ட ஆசீர்வாதம். 

ஓய்வு ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் மூன்று வருஷ விளைச்சலை கர்த்தர் தருவார். இது இஸ்ரவேல் தேசத்துக்காக சொல்லப்பட்ட ஆசீர்வாதம். 

இந்த பாழாய்ப்போன சோமாலியா, நைஜீரியா மற்றும் வறண்ட பூமியான எங்கள் ராமநாதபுரம் மாவட்டம் இவைகளுக்கெல்லாம் இது பொருந்தாது. பொருந்தினால் பார்த்து சொல்லவும். 

பொருளாதாரத்தில் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட நம் இந்தியாவுக்கும் இது பொருந்தாது. பொருந்தினால் பார்த்து சொல்லவும்.

இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் ஏதாவது பொருத்தம் இருந்தா சொல்லுங்க. சரீரப் பிரகாரமான ஆசீர்வாத்தில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உள்ள வேறுபாடு பல ஆயிரங்கள். ஆவிக்குரிய ரீதியில் கிறிஸ்தவர்கள் மேலானவர்கள். சரீரம், நிலம் இவற்றில் அப்படியல்ல. 

ஒரு நாள் அல்ல. எல்லா நாளையும் கர்த்தருக்கே கொடுப்பது தான் நம் அழைப்பு. நம்முடைய Sabbath, பஸ்கா எல்லாம் கிறிஸ்து வரும்போது கொண்டாடப்படும். ஞாயிறு மட்டும் பிரசவ வேதனையும் பசியும் யாருக்கும் விதிவிலக்கல்ல. 

இப்படிக்கு,

இந்தியக் கிறிஸ்தவன்.

Monday, October 12, 2020

மார்பகம் என்ன கவர்ச்சிப் பொருளா? (14+)

ஒரு மனிதன் பிறந்த பிறகு அவன் சேரும் முதல் இடம் தன் தாயின் மார்பகங்கள் தான். அந்தக் கொலஸ்ட்ரம் என்று சொல்லப்படும் முதல் நிலைப் பால் மனிதனால் உருவாக முடியாத பேரற்புதம்...

ஒரு மனிதன் பிறந்து சில மாதங்கள் இரவும் பகலும் தூங்காமல் கண் விழிக்கும் தாய், உஷ்ணத்திற்கும் அரவணைப்பிற்கும் அவளிடம் சேர்க்கும் இடம் அவளுடைய மார்பகங்கள்...

பிள்ளைப்பெற்ற பல பெண்கள், பலவித உடல் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல் எடை மற்றும் மார்பக அளவுகள் கூடும்போது, அவர்கள் சந்திக்கும் உளவியல் பிரச்சனைகள், பல கணவன்களுக்குக் கூடப் புரிவதில்லை...

இரவும் பகலும் வீட்டுவேலை, கவலை, மன அழுத்தம், பிள்ளைகள் பராமரிப்பு என்றெல்லாம் போராடும் பல பெண்களுக்கு தங்கள் உடலைப் பராமரிக்க நேரமில்லை. திடீரென்று மார்ப்பில் வலி, வீக்கம்.. மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்தால், மார்பகப் புற்று நோய் என்று ரிப்போர்ட். 

அறுவை சிகிச்சை முடிந்தது.  "மார்பகங்கள்" இப்போது "மார்பகம்" ஆனது. அப்போதும் அந்த வலியைப் பகிர ஒருவரும் இல்லை. 

கடைசியாக சவப்பெட்டி அழைக்கிறது, மீதமுள்ளதை புழுக்களும் நுண்ணுயிரிகளும் உண்டு தன் கடமையை முடிக்கிறது...

இதற்கு மத்தியில், 

சில கூத்தாடிகள் திரைப்படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் பெண்ணின் மார்பகத்தை ஆபாசமாக சித்தரித்து நிறைய பணம் ஈட்டுகிறார்கள். இவர்களே பிற்காலத்தில் அரசியல் பதவிகளுக்கு வந்து தமிழ்த் தாயின் மார்பையும் பாரத் தாயின் மார்பையும் அறுத்து சாப்பிடவும் செய்கிறார்கள்...

சாலையில், ரயிலில், பேருந்தில் என எல்லா இடங்களிலும் பார்வைகள் இடம் மாறும் மனிதர்கள்.. உச்சகட்டமாக சில தாறுமாறான சீண்டல்கள்.. சிந்தையில் விதைக்கப்பட்ட விஷயம் தான் பார்வையாகவும் செயல்களாகவும் மாறுகிறது. அவனை மட்டும் குறை சொல்லி என்ன செய்வது.. கல்வி மனப்பாடம் செய்ய சொல்லியும், சமுதாயம் இது போன்ற சினிமாக்களை பார்க்கவும் சொல்லிக்கொடுத்திருக்கிறது...

பெண்ணின் மார்பகங்களை போகப்பொருளாக சித்தரித்து படம் எடுப்பவர்கள், பாடல் எழுதுபவர்கள், வாழ்க்கையில் ஒரு முறையாவது தங்கள் தாயிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். காரணம் அவனுடைய மொழியில் "அந்த ஐட்டம்" இல்லை என்றால் அவன் என்றைக்கோ செத்திருப்பான்..

ஆபாசக் கதைகளை திரைப்படங்களாகவும், ஆபாச வரிகளை சினிமாப் பாடல்களாகவும் விதைத்த இந்த சமுதாயம், இவைகளை கல்வி என்னும் ஆயுதத்தைக் கொண்டு களையெடுக்க முடியும்.. ஆனால் அதுக்கு எவ்வளவு செலவாகுமோ! 

நூறு சதவீதம் இச்சையில்லாமல் யாரும் வாழ முடியாது, சில உணர்வுகள் இயற்கையானது. ஆனால் அதினால் வெளிப்படும் கண்ணியமற்ற பார்வையும் செயல்பாடும் மிகத் தவறானது. நம்முடைய சந்தைகளில் ஏற்படும் சில மாற்றங்கள் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு கொஞ்சம் நல்லது. நமக்கு அது மிகவும் நல்லது. 

அப்புறம், அந்த சால் கரெக்ட் பண்ணிகோங்க சிஸ்டர்..

#நல்ல_சிந்தைகளைக்_கொளுத்திப்_போடுவோம்.

Tuesday, October 6, 2020

இந்த உலகத்தின் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி என்றைக்காவது யோசித்ததுண்டா?

என்றைக்கு வேண்டுமானாலும் மரணம் ஏற்படலாம், போர் மூலமாகவோ, ராணுவத்தின் மூலமாகவோ, இயற்கைப் பேரிடர் மூலமாகவோ எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்ற நிலையில் உள்ள மனிதர்கள்...

எந்த நாட்டிலும் குடியுரிமை இல்லை என்ற நிலையில் வாழும் அகதிகளின் எண்ணிக்கை 12 மில்லியன் (கணக்கிடப்பட்டவை மட்டும்)

அமைதியான வாழ்க்கை வாழும் நான் அதற்காக எந்தப் புண்ணியமும் செய்யவில்லை. அமைதியற்ற இடத்திலேயே பிறந்து வாழும் அவர்களும் பாவம் செய்ததால் அங்கே இல்லை. 

இந்த நிலையில் ஜான் கால்வின் அவர்களின் சில கோட்பாடுகளையும் சிந்திக்க வேண்டியுள்ளது. எல்லாமே அங்கே தீர்மானிக்கட்டதென்று!

மனிதன் மரித்தபின் வாழ்கிறான் என்பது அனைத்து மதங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. பைபிள் அந்த வாழ்க்கைக்கு சில வரையறைகளை வைக்கிறது. அதில் ஒரு வகை பிரசங்கக் குறிப்புகளில் கண்டிராத ஒன்று.

லாசரு! இவனுக்கு உடம்பெல்லாம் பருக்கள், ஒரு வேளை கூட வயிறார உண்ண முடியாத நிலை. இவன் இறந்தபின் ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகிறான். அதற்கு பைபிளில் சொல்லப்பட்ட ஒரே காரணம், அவன் உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம் துன்பப்பட்டான், ஆதலால் இப்பொழுது மகிழ்ச்சியாய் இருக்கிறான் என்பதே!

நம்முடைய பிரசங்க அறிவு கூட சில நேரங்களில் தேவனையே மிஞ்சி விடுகிறது. குறிப்பு எடுத்து பிரசங்கம் செய்வதை விட அவரைப் புரிந்து கொண்டு பிரசங்கம் செய்வதையே விரும்புகிறேன். கூடுமானால்.. 

அவரைப் பார்த்து பிரம்மிக்கும் போது யோபுவால் பேச முடியவில்லை. அவருடைய கேள்விகள் ஒன்றிற்கும் யோபுவிடம் பதில் இல்லை. 

அவருடைய மகிமையைக் கண்டபின் அன்பின் சீஷன் செத்தவனைப் போல பாதத்தில் விழுந்தான். அவருடைய மகிமையைக் காணாமலே நமக்கு இவ்வளவு பெருமைகளா!

எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. தினமும் கற்றுக்கொள்கிறேன், அவரை அறிய, அவரைப்பற்றியே, அவர் பாதத்தில்! 

சகோதரன்,

முகில்.