Monday, October 12, 2020

மார்பகம் என்ன கவர்ச்சிப் பொருளா? (14+)

ஒரு மனிதன் பிறந்த பிறகு அவன் சேரும் முதல் இடம் தன் தாயின் மார்பகங்கள் தான். அந்தக் கொலஸ்ட்ரம் என்று சொல்லப்படும் முதல் நிலைப் பால் மனிதனால் உருவாக முடியாத பேரற்புதம்...

ஒரு மனிதன் பிறந்து சில மாதங்கள் இரவும் பகலும் தூங்காமல் கண் விழிக்கும் தாய், உஷ்ணத்திற்கும் அரவணைப்பிற்கும் அவளிடம் சேர்க்கும் இடம் அவளுடைய மார்பகங்கள்...

பிள்ளைப்பெற்ற பல பெண்கள், பலவித உடல் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல் எடை மற்றும் மார்பக அளவுகள் கூடும்போது, அவர்கள் சந்திக்கும் உளவியல் பிரச்சனைகள், பல கணவன்களுக்குக் கூடப் புரிவதில்லை...

இரவும் பகலும் வீட்டுவேலை, கவலை, மன அழுத்தம், பிள்ளைகள் பராமரிப்பு என்றெல்லாம் போராடும் பல பெண்களுக்கு தங்கள் உடலைப் பராமரிக்க நேரமில்லை. திடீரென்று மார்ப்பில் வலி, வீக்கம்.. மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்தால், மார்பகப் புற்று நோய் என்று ரிப்போர்ட். 

அறுவை சிகிச்சை முடிந்தது.  "மார்பகங்கள்" இப்போது "மார்பகம்" ஆனது. அப்போதும் அந்த வலியைப் பகிர ஒருவரும் இல்லை. 

கடைசியாக சவப்பெட்டி அழைக்கிறது, மீதமுள்ளதை புழுக்களும் நுண்ணுயிரிகளும் உண்டு தன் கடமையை முடிக்கிறது...

இதற்கு மத்தியில், 

சில கூத்தாடிகள் திரைப்படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் பெண்ணின் மார்பகத்தை ஆபாசமாக சித்தரித்து நிறைய பணம் ஈட்டுகிறார்கள். இவர்களே பிற்காலத்தில் அரசியல் பதவிகளுக்கு வந்து தமிழ்த் தாயின் மார்பையும் பாரத் தாயின் மார்பையும் அறுத்து சாப்பிடவும் செய்கிறார்கள்...

சாலையில், ரயிலில், பேருந்தில் என எல்லா இடங்களிலும் பார்வைகள் இடம் மாறும் மனிதர்கள்.. உச்சகட்டமாக சில தாறுமாறான சீண்டல்கள்.. சிந்தையில் விதைக்கப்பட்ட விஷயம் தான் பார்வையாகவும் செயல்களாகவும் மாறுகிறது. அவனை மட்டும் குறை சொல்லி என்ன செய்வது.. கல்வி மனப்பாடம் செய்ய சொல்லியும், சமுதாயம் இது போன்ற சினிமாக்களை பார்க்கவும் சொல்லிக்கொடுத்திருக்கிறது...

பெண்ணின் மார்பகங்களை போகப்பொருளாக சித்தரித்து படம் எடுப்பவர்கள், பாடல் எழுதுபவர்கள், வாழ்க்கையில் ஒரு முறையாவது தங்கள் தாயிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். காரணம் அவனுடைய மொழியில் "அந்த ஐட்டம்" இல்லை என்றால் அவன் என்றைக்கோ செத்திருப்பான்..

ஆபாசக் கதைகளை திரைப்படங்களாகவும், ஆபாச வரிகளை சினிமாப் பாடல்களாகவும் விதைத்த இந்த சமுதாயம், இவைகளை கல்வி என்னும் ஆயுதத்தைக் கொண்டு களையெடுக்க முடியும்.. ஆனால் அதுக்கு எவ்வளவு செலவாகுமோ! 

நூறு சதவீதம் இச்சையில்லாமல் யாரும் வாழ முடியாது, சில உணர்வுகள் இயற்கையானது. ஆனால் அதினால் வெளிப்படும் கண்ணியமற்ற பார்வையும் செயல்பாடும் மிகத் தவறானது. நம்முடைய சந்தைகளில் ஏற்படும் சில மாற்றங்கள் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு கொஞ்சம் நல்லது. நமக்கு அது மிகவும் நல்லது. 

அப்புறம், அந்த சால் கரெக்ட் பண்ணிகோங்க சிஸ்டர்..

#நல்ல_சிந்தைகளைக்_கொளுத்திப்_போடுவோம்.

No comments:

Post a Comment