Monday, September 28, 2020

Holy Spirit is Online!

Dear 2k Kids, Holy Spirit is Online! 

நாங்க 90ஸ், 80ஸ் கிட்ஸ். Orkut எங்களுக்கு கிடைத்த பெரிய பிரம்மாண்டமான சமூக வலைதளம். பிற்காலங்களில் Facebook. ஆனால் அதற்குள் வரவே எங்களுக்குத் தாமதமானது.

பாய்ஸ் படம் பாக்காத, கெட்டுப் போயிருவன்னு அன்றைய "சான்றோர்" சொல்லியும், 

ஸ்கூல் பசங்களா இருக்கும்போதே ரகசியமா பாய்ஸ் படத்தை பாத்து, வாழ்க்கையில் எப்பிடி உருப்படலாம்னு நினைத்த தலைமுறை நாங்க. 

ஆனா இன்னக்கி இருக்குற 2k கிட்ஸ புரிஞ்சுக்கவே முடியல. வாட்ஸாப் ஸ்டேட்டஸ்ல DP  வைக்காதனு அட்வைஸ் பண்ணா, இந்த 80ஸ் எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கம் வரவா போறாங்கன்னு சொல்லிட்டு, அங்கே புகுந்து விளையாடும் தலைமுறை 2k கிட்ஸ். இன்றைக்கு காட்டப்படும் "சில" திரைப்படங்களோடு ஒப்பிடும்போது பாய்ஸ் படமெல்லாம் சுத்தபத்தமான படம். 

காதல் பண்ணினா வீட்டை எதிர்த்தாவது திருமணம் செய்ய வேண்டும் என்று போராடிய எங்கள் தலைமுறை. இதற்கு முந்தைய தலைமுறை அதற்கு மேல். பல காதல் தோல்வி தற்கொலை வழக்குகள். ஆனால் இப்பல்லாம் பிக்கப், டிராப், எஸ்கேப் தான்.

பத்து ஆண்டுகளில் இவ்வளவு பெரிய தலைமுறை வேறுபாடுகள் இருந்தது வரலாற்றில் இதுவே முதல் முறை. இதற்கு டெக்னாலஜி வளர்ச்சியும் ஒரு காரணம்.

சபை ஊழியங்களில் சிறந்து விளங்கும் பல மூத்த போதகர்கள் கூட, தங்கள் சொந்த பிள்ளைகளை வளர்க்க தடுமாறுகிறார்கள். அவர்களுக்கு Browsing History அழிக்கவும் தெரியும், தேவைப்பட்டால் Format பண்ணவும் செய்வார்கள். 

இதற்கெல்லாம் என்ன தீர்வு? வேத வசனம் பல ஆயிரம் ஆண்டுகளாக மாறாததுதான். ஆனால் அதை வாலிபர்களிடம் கொண்டு செல்லும் முறைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது, தவறு ஒன்றும் இல்லை. பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே மாறாதவரும் தீர்வுமாய் இருக்கிறார்.

ஆவியானவர் ஒருவர் தான். வெளியே ஆயிரம் மாற்றங்கள் ஏற்பட்டாலும் உள்ளான மனிதன் ஒருவன் தான். நம்முடைய உள்ளான மனிதன் நிர்வாணமாய் ஆவியானவர் முன்பாக இருக்கிறான். அதை பகுத்து பிரித்து ஆவியானவர் ஆராய்ந்து வைத்திருக்கிறார்.

ஆண்டவருக்கு நீங்க Delete பண்ற Browser history, Call history, whatsapp message எல்லாமே தெரியும். ஒரு நிமிஷத்தில் உங்க Smart Phoneஐ சுக்கு நூறாக்க, Corrupt பண்ண ஆண்டவருக்குத் தெரியும். அவருக்கு இந்த டெக்னாலஜி ஒரு தூசிக்கு கூட வராது. ஆனா பொதுவா அதை அவரு செய்ய மாட்டாரு. அவரு ரொம்ப Decent. சில நேரங்கள்ல கொஞ்சம் தூரத்துல நிப்பாரு, உங்க personal matterல தலையிட மாட்டாரு. நீங்க அவர் கிட்ட ஒப்புக்கொடுக்கும் வரை.

ஆனா அவர மாதிரி ஒரு நல்ல Friend உங்களுக்கு கிடைக்கவே மாட்டாரு. எத்தனையோ முறை உங்களை Hug பண்ணுவாரு, Kiss பண்ணுவாரு. நீங்க தப்பு பண்ணும்போது ரொம்ப வருத்தப்படுவாரு. அத விட நீங்க நல்லவங்க மாதிரி சர்ச்ல நடிக்கிறீங்கன்னா, கொஞ்சம் தூரமாவே இருந்துக்குவாரு. 

ஆனா அவரு ரொம்ப நல்லவருங்க. அவரு நல்ல Friends தேடிக்கிட்டே இருப்பாரு. அவருக்கு Friendஆ இருக்குறவுங்க ரொம்ப கொடுத்து வச்சவுங்க. தானியேல், யோசேப்பு மாதிரி. தேசங்களோட அதிபர்கள் கூட உங்களை நம்பி இருக்குற மாதிரி பண்ணிருவாரு. அவர் கூடவே இருக்கனும், அது தான் ஒரே கண்டிஷன். 

கொஞ்சம் தனியா Time Spend பண்ணனும். பைபிள் எடுத்து அவர் கூட உட்காரனும். இயேசு கிறிஸ்துவுக்கு ரொம்ப பிடிச்சவுங்க, கூடவே இருந்த யோவான், பாதத்துல உக்காந்து பாடம் படிச்ச மரியாள். பரிசுத்த ஆவியானவரும் அதைத்தான் எதிர்பாக்குறாரு.

உங்க Friend யாரு, அது தான் இப்ப கேள்வி.. ஆவியானவர் உங்க நண்பன் அப்பிடினா நீங்க தான் ராஜா.. நண்பன் படத்துல விஜய் நண்பர்கள் வாழ்க்கையையே மாத்திருவாரு. ஆவியானவர் அதுக்கும் மேலான நண்பன். ராஜா, பிரதமர், ஜனாதிபதி, பார்லிமென்ட்ல மெஜாரிட்டில பாஸ் பண்ண மசோதா எல்லாத்துக்கும் மேலான ராஜரீக அபிஷேகம் உங்க மேல இருக்கும். 

கொஞ்சம் சினிமா கலந்தது உங்களுக்கு புரியத்தான். நண்பனை விட்றாதீங்க.. தேடியாச்சும் புடிச்சு ஒரு Good Morning, Good Afternoon, Good Night எல்லாம் சொல்லி கரெக்ட் பண்ணி வச்சுக்கோங்க. 

Holy Spirit is Online!

Monday, September 21, 2020

தேவ வார்த்தையும் மனிதனுடைய உபதேசங்களும்

ஒரு காலத்தில் டிவி வீட்டில் இருந்தாலே பாவம் என்று பிரசங்கம் செய்யப்பட்டது. ஆனால் இன்றைக்கு டிவி, மீடியா வழியே பல ஊழியங்கள், சபை ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.

பல சபைகளில் (இன்றைக்கும்) காதல் திருமணம் செய்பவர்களை சமூகத்தில் உள்ள தீய சக்திகளைப் போல பாவிப்பதுண்டு. ஆனால் அதே சபைகளில் ஜாதி மற்றும் வரதட்சணை கேட்டு நடத்தப்படும் திருமணங்களை வெள்ளைகொடி காட்டி வரவேற்கும் அவலமும் நடந்து கொண்டிருக்கிறது.

இதே போல் தான் வெள்ளைச்சட்டை போடுவது, நகை அணிவது, முக்காடு போடுவது, மீசை தாடி எடுப்பது, சினிமா பார்ப்பது என்று மிஞ்சின பிரசங்கங்கள். பாவங்களை வேதத்தில் சொல்லப்பட்ட அளவில் சொல்வது தான் சரி. தொடாதே, சாப்பிடாதே, பார்க்காதே என்று சொல்லும் பிரசங்கங்களால் ஒரு பயனும் இல்லை. 

இனியாவது மனுஷ கற்பனைகளை (வெளியரங்கமான மாற்றங்களை) மேன்மைப்படுத்திப் பேசாமல் உள்ளான மாற்றத்தை பேச வேண்டும். வேதத்தில் விபச்சாரம் தவறு என்று சொன்னால், முழு உலகத்திற்கும் அது தவறுதான். அதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆனால் மனிதர்கள் உருவாக்கிய கற்பனைகள் அப்படியல்ல. மனிதனுடைய உபதேசங்களால் நிறைந்த ஒரு பிரசங்கத்தை, ஒரு பத்து வருடம் கழித்து கேட்டால் அதிகபட்சமாக இருக்கும் (உதாரணம் டிவி வீட்டில் வைத்திருப்பது, ஸ்மார்ட் போனில் பைபிள் படிப்பது).

விபச்சாரம் செய்வதும், வெள்ளைச்சட்டை போடாமல் சபைக்கு வருவதும் பாவம் என்று சொல்லும்போது இரண்டிற்கும் ஒரே அழுத்தம் தரப்படுகிறது. இது தேவ கட்டளைகளுக்கு இணையாக மனுஷ உபதேசங்களை வைப்பது போன்றது. வேதத்தில் கூட்டினாலும் தவறு, குறைத்தாலும் தவறு.

ஏவாள் வஞ்சிக்கபட்டதில் மூன்று நிலை இருக்கிறது (Adding, Altering, Avoiding). தேவனுடைய கட்டளைகளோடு கூட்டுவது, அதை மாற்றுவது, அதை நிராகரிப்பது (நன்றாக ஏவாள் - சாத்தான் பேச்சை ஒவ்வொரு வார்த்தையாக படித்தால் புரியும்). 

வேத வார்த்தைகளில் ஒன்றும் கூட்ட வேண்டாம், குறைக்கவும் வேண்டாம். ஆலோசனைகளை சொல்லலாம், சொல்ல வேண்டும். ஆனால் அவை சூழ்நிலையை பொறுத்து மாறும். வேதாகமத்தில் உள்ள கட்டளைகளோ எந்த நிலையிலும் மாறாது. 

நன்றி,

சகோதரன் முகில்.

Monday, September 7, 2020

யாருக்கு மேன்மை?

ஒரு பிரசங்கியார் மேடை போட்டு ஒரு மணிநேரம் தாவீதைப் பற்றி பெருமையாகவும் சவுலைப்பற்றி சிறுமையாகவும் பேசிக்கொண்டிருந்தார். ஒரு வாலிபன் எழுந்து, "ஐயா, தாவீதைப் பற்றி பெருமையாக பேசுகிறீர்கள், ஆனால் அவர் செய்த பாவங்களில் சில, சவுல் செய்த பாவங்களை விட கொடுமையானது" என்றான்.

பிரசங்கியார் வீட்டிற்குச் சென்று தாவீது மற்றும் சவுலின் பாவங்களை  ஒரு பட்டியல் போட்டார். அவருக்கு அதிர்ச்சி என்னவென்றால், தாவீதின் ஒரு குறிப்பிட்ட பாவம் சவுலின் மொத்த பாவத்தையும் அடித்து சாப்பிடுவது போல் இருந்தது.

பிறகுதான் புரிந்து கொண்டார், இனிமேல் மேன்மையாகப் பேச வேண்டியது பாத்திரங்களைப் பற்றியல்ல. பாத்திரங்களை உருவாக்கி அவர்களைப் பயன்படுத்தும் தேவனைப் பற்றிதான் என்று.

ஒரு புதிய உடன்படிக்கை விசுவாசி, கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய சிலுவையைப் பற்றியுமே பேச வேண்டும். எந்த சாட்சியைப் பேசினாலும், அந்த சாட்சியை உருவாக்கிய கர்த்தரையே மேன்மைபாராட்ட வேண்டும். 

தாவீதைப் பெருமையாகப் பேசும் சில பிரசங்கியார்கள், பிற்காலங்களில் பாவங்களில் விழும்போது, அதே தாவீதின் பாவங்களை மறைவிடமாகவும் புகலிடமாகவும் பயன்படுத்துவது துரதிஷ்டவசமானது. கிறிஸ்து தான் நமக்கு எல்லாவற்றிலும் முன்மாதிரி. அவரிடத்தில் பிழை ஒன்றுமில்லை.

*மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன். - 2 கொரிந்தியர் 10:17*

*நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக. அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். கலாத்தியர் 6:11*

#கிறிஸ்துவின்_சிலுவையை_மேன்மை #தேவனுக்கே_மகிமை 

- முகில்