Friday, March 12, 2021

நரேந்திர மோடி நமக்குத் தேவை

*நரேந்திர மோடி நமக்குத் தேவை (இது அரசியல் பதிவு அல்ல, தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றியது)*

"இந்த மோடிக்கு ஒரு சாவு வராதா" என்று புலம்பும் நபர்களை பார்த்திருக்கிறேன். அவ்வாறு நினைக்கும் சில கிறிஸ்தவர்களையும் பார்த்திருக்கிறேன். இந்த சிந்தை எவ்வளவு துரதிஷ்டவசமானது என்பதையும், நம்மை பாதுகாக்க நம்மை ஆள்பவர்களை தேவன் எப்படி பயன்படுத்துகிறார் என்பதையும் வேத வசன ஆதரங்களோடு பார்க்கலாம்.

வேதத்தில் படிக்கும்போது "அகாஸ்வேரு" ராஜாவின் நாட்களில், ராஜாவைக் கொல்ல ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்ட போது மொர்தெகாய் அந்தத் தகவலை எஸ்தர் மூலமாக ராஜாவுக்கு அறிவிக்கிறான். அதன் மூலம் ராஜாவின் உயிர் காப்பற்றப்படுகிறது. யூதர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆண்டவரை அறியாத புறஜாதிய ராஜா, "செத்து ஒழியட்டும்" என்று மொர்தெகாய் நினைக்கவில்லை. அவரையும் காப்பாற்றும் அந்த "கிறிஸ்துவின் சிந்தை" தான் அகாஸ்வேரு ராஜாவை உயிரோடு காத்தது. மொர்தெகாய் செய்த நன்மையின் பலனை, ராஜா மறந்திருந்தாலும் மொத்த யூத ஜனங்களும் காப்பற்றப்படும்படியாக, தேவன் அதை ஏற்ற நேரத்தில் ராஜாவுக்கு நினைப்பூட்டினார். ராஜாவின் உயிரை மொர்தெகாய் காப்பாற்றியது போல, மொர்தெகாயின் உயிரையும் யூத ஜனங்களின் உயிரையும் ராஜாவே காக்கும்படி தேவன் செய்தார். 

நாம் விரும்புவது போல் நம்முடைய தேசத்தை ஆள்பவர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எல்லா அதிகாரங்களும் தேவனால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நம் பிரதமர் உட்பட, நமக்கு மேலுள்ள அதிகாரங்களின் பாதுகாப்பில் கிறிஸ்தவர்கள் அக்கறை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். அவர்களுடைய வீழ்ச்சி நமக்கு நன்மையாக இருக்கும் என்று நினைக்க முடியாது. ஒருவேளை அன்றைக்கு அகாஸ்வேரு ராஜா கொலை செய்யப்பட்டிருந்தால், ஆமான் அன்றைய தினமே ராஜாவாகி இருப்பான். மொர்தெகாய் தனக்கும் தன் ஜனங்களுக்குமான நன்மையை பின் வரும் காலங்களில் பெறும்படியாக, எப்படி முன்பே ராஜாவுக்கு செய்திருக்கிறான் பாருங்கள்!

மொர்தெகாயிடம் இருந்த அதே சிந்தை தான் இன்றைக்கு பொது வெளியில் நரேந்திர மோடியை திட்டும் கிறிஸ்தவர்களுக்கு தேவையாக இருக்கிறது. நம் நாடு ஜனநாயக நாடு என்றாலும், நாம் விரும்பும் நபர்களுக்கு நாம் வாக்களித்தாலும்,  கிறிஸ்தவர்களாகிய நாம், தேவனுடைய ராஜ்யத்தின் மேல் நம்பிக்கை உடையவர்களாய் இருக்க வேண்டும். ஆம், கர்த்தர் சதாக்காலங்களிலும் அரசாளுகிறார். எல்லா அதிகாரங்களும் தேவனுக்குக் கீழ் தான் இருக்கிறது. நமக்கு மேல் அதிகாரங்களில் வைக்கப்பட்டவர்களுக்காக மன்றாட வேண்டியது நம் கடமை!

- முகில்

No comments:

Post a Comment