Sunday, February 28, 2021

இயேசுவின் வருகைக்காக ஏன் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்?

இயேசுவின் வருகைக்காக ஏன் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்?

எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். 

லூக்கா 21:20

இந்த தீர்க்கதரிசனத்தின் முதல் பகுதி சில முறை நிறைவேறி விட்டது. இன்னும் ஒரு முறையாவது நிறைவேறும்.

இதே போல் தான் நினையாத நாழிகையில் வருவது. காலத்தை கணக்கிட்டு காலம் வரும்போது பார்க்கலாம் என்று நினைப்பவர்களுக்கு கர்த்தரே கண்ணில் மண்ணைத் தூவி விடுவார். இதே போல் தான் அவர் பிறப்பின் இடத்தை வைத்து யூதர்களுக்குச் செய்தார். எப்போதும் விழித்திருக்க வேண்டும் என்று சொல்வது இதற்கு தான்.

தேவனுடைய வசனத்தை cheat code போட்டெல்லாம் hack பண்ண முடியாது. "நினையாத நாழிகையில்" என்று சொல்லப்பட்ட வார்த்தைக்கும் "ரகசிய வருகைக்கும்" சம்பந்தமே இல்லை. "உபத்திரவ காலத்திற்கு முன்பாக எடுத்துக்கொள்ளப்படுதல்" எனப்படுவதற்கும் வசன ஆதாரம் இல்லை. வெளியரங்கமான வருகையில் மட்டுமே இந்த சம்பவம் நிகழும். விழித்திருப்பது, ஆயத்தமாக இருப்பதே நல்லது. காரணம் அது தேவ கட்டளை. காலம் வரட்டும் பார்ப்போம் என்பவர்களுக்கு காலம் வருவதும் தெரியாது, கிறிஸ்து வருவதும் தெரியாது. இருதயத்தை அவரே மந்தமாக்கி விடுவார். மனக் கண்களை குருடாக்கி விடுவார்.

இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக்கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார். 

ஏசாயா 6:10

நம் கண்கள் திறக்கப்பட்டது நம் தெரிந்தெடுப்பு அல்ல. தேவனுடைய ஈவு!

பகுதி 2 - ரகசிய வருகை என்னும் பிசாசின் உபதேசம்

ரகசிய வருகை என்னும் பிசாசின் உபதேசம் - பகுதி 2 (முழுதும் படிக்கவும், இரவும் பகலும் ஆராய்ந்து நம் பிழையான உபதேசத்தை நம்பக் கூடாது என்பதால் பாரத்தோடு எழுதுகிறேன்)

ரகசிய வருகை என்பது பிசாசின் உபதேசம் என்று போன கட்டுரையில் எழுதியிருந்தேன். இப்போதும் அதைத் தான் எழுதுகிறேன். ஏனென்றால் வேத வசனத்தை மீறும் எந்த உபதேசத்தையும் இதற்கு மேல் மரியாதையாக எழுத முடியாது. இதே "பிசாசின் உபதேசம்" என்னும் வார்த்தை வேதத்திலும் இருக்கிறது. (1 திமோத்தேயு 5:4). கோபப்படாமல் தொடந்து படியுங்கள். கர்த்தர் உங்கள் கண்களை திறப்பாராக. தொடராக எழுதலாம் என்று இருக்கிறேன்..

திருடனைப் போல வருகிறேன் என்ற வார்த்தை "விழித்திராதவர்களுக்கு / இருளில் நடப்பவர்களுக்கு" என்பதை வேதத்தில் "திருடனைப் போல" என்று சொல்லப்பட்ட நான்கு இடங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. இது சபைக்கானது அல்ல என்பதும் தெளிவாக இதே இடத்தில் (1 தெசலோனிக்கேயர் 5) சொல்லப்பட்டிருக்கிறது. நமக்கு அவர் திருடன் அல்ல, மணவாளன்.. 

இப்போதைக்கு உயிர்தெழுதல் / சபை சேர்த்துக்கொள்ளப்படுதல் என்னும் காலத்தை கீழ்கண்ட இந்த வசனத்தை ஆதாராங்களோடு பார்க்கலாம்.

"ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 

பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 

1 தெசலோனிக்கேயர் 4: 16-17"

இங்கே மூன்று சத்தம் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் கர்த்தருடைய ஆரவாரம் முக்கியமானது. அவருடையவர்கள் அவர் சத்தத்தைக் கேட்பார்கள் என்பது இயேசுவின் வார்த்தை (யோவான்10 : 27).  அவருடைய மனவாடிக்கும் வருகையின் எச்சரிப்பு பிரதான தூதன் (மிகாவேலாக இருக்கலாம்) மூலமாகவும், தேவ எக்காளம் மூலமாகவும் தரப்பட்டும். எக்காளம் என்றாலே வரும் காரியத்தை மக்களுக்கு அறிவிப்பதற்குத் தானே.

"நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. 

மத்தேயு 25:6"

இங்கே சத்தம் கேட்கப்பட்டாலும் புத்தியில்லாத கண்ணிக்கைகள் மனந்திரும்பியும் அவருடைய வீட்டிற்குள் பிரவேசிக்க முடியவில்லை. இதே போல் தான் சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப் போட்ட ஏசா கண்ணீர் விட்டு கவலையோடு தேடியம் பலன் கிடைக்கவில்லை என்று வேதம் சொல்கிறது. (எபிரேயர் 12:16)

மேற்கண்ட  தெசலோனிக்கேயருக்கு எழுதப்பட்ட வசனத்தில், "கர்த்தருக்கு எதிர்கொண்டு போக மேகங்கள் மேல்" என்பதை சிந்தித்துப் பாருங்கள். "மேகங்கள் மேல்" என்கிற வார்த்தை வேறு சில இடங்களிலும் இருக்கிறது. சபைகளுக்கு யோவான் இதைத் தான் எழுதுகிறார்.

"இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். வெளிப்படுத்தின விசேஷம் 1:7"

ஆம். இயேசுவின் பகிரங்க வருகையில் தான் உயிர்த்தெழுதல் நடக்கும். கண்கள் யாவும் அவரைக் காணும் என்பது எப்படி ரகசிய வருகை ஆகும்? பின்பு தான் சபை எடுத்துக்கொள்ளப்படும் (மொத்த சபையும் என்று நினைக்க வேண்டாம், புத்தியுள்ள கண்ணிக்கைகள் மட்டுமே, கடைசி அடையாளங்கள் நடக்கும் போது மனந்திரும்பி விடலாம் என்று நினைத்தால்.. வாய்ப்பில்ல ராஜா, இருதயங்கள் எல்லாம் தேவனுக்குத் தெரியும்).

இதே சம்பவத்தைத் தான் வெளிப்படுத்தின விசேஷம் 14:14 ல் பார்க்க முடிகிறது. பின்பு தான் இயேசு உவமைகளாகச் சொன்ன அறுவடை நடக்கிறது.

இதே சம்பவம் தான் வெளிப்படுத்தின விசேஷம் 6ஆம் அதிகாரத்தின் கடைசியிலும்,7ஆம் அதிகாரத்திலிலும் நடக்கிறது. "அவருடைய மகா கோபாக்கினையின் நாள் வந்துவிட்டது" என்று பூமியில் உள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்பிய" பின் தான் மகா உபத்திரவத்தில் இருந்து வந்த பெருங்கூட்ட ஜனம் சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கிறது. அந்த மகா உபத்திரவம் பற்றி ஐந்தாம் முத்திரை உடைக்கப்படும் போது ஆண்டவரே சொல்கிறார். முதலாம் முத்திரையிலேயே அந்திகிறிஸ்து போன்ற ஒருவனை வெள்ளைக் குதிரையில் பார்க்க முடிகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 6,7 தான் யோவானின் அடுத்த தரிசனத்தில் வேறு பார்வையில் காட்டப்பட்டிருக்கிறது. குறைந்தது மூன்று தரிசனங்கள் வெளிப்படுத்தின விசேஷத்தில் இருக்கிறது. முதல் இரண்டு தரிசனங்களும் தேவனுடைய ஆலயம் பரலோகத்தில் திறக்கப்படுவதை ஒட்டி முடிகிறது. இது என் பார்வை தான். வேறு பார்வைகளில் படித்தாலும் ரகசிய வருகை இருக்காது. காரணம் அது வேதத்திற்குப் புறம்பானது. இதைத் தனியாக வேறு கட்டுரையில் எழுதுகிறேன்.

மத்தேயு 24:30ல் இயேசு மேகங்கள் மேல் வருக்கிறதை அவரே சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன பகுதியில் "சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்" என்று அவரே சொல்லியிருக்கிறார். 

இந்த ரகசிய வருகைப் பிரசங்கியார்கள் சிலர் (அனைவரையும் தவறு சொல்லவில்லை) ஒருவேளை, இயேசு இங்கே இருக்கிறார், அங்கே இருக்கிறார் என்று சொல்லக்கூடும். உபதிரவ காலத்தில் மக்களை வேறு ஒரு இயேசுவின் பக்கம் திருப்பி விட வாய்ப்பு இருக்கிறது என்பதை வருத்தத்தோடும் பாரத்தோடும் பதிவிடுகிறேன். இதை நான் மட்டும் சொல்லவில்லை. இயேசுவே சொல்லியிருக்கிறார். 

"அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். 

ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 

இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். 

ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள், இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். 

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். 

பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். 

மத்தேயு 24 : 23 - 28"

இயேசு சொன்ன மேற்கண்ட வசனப்பகுதிகளில் உள்ள சாரம், "ரகசியமாக இயேசு வரமாட்டார், மின்னல் பிரகாசிக்கிறது போல் தான் வருவார்" என்பதே.

நீங்கள் இதுவரை ரகசிய வருகையை நம்பியிருந்தால், நான் சொல்வதினிமித்தம் அல்ல. இயேசு சொல்வதினிமித்தம் இந்த கள்ள உபதேசத்தை விட்டு வெளியே வாருங்கள்.

பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்பது ஆழமான வார்த்தை. இதிலும் இரகசிய வருகை இல்லை என்பது நிரூபணமாகும். ஆனால் இதை பின் வரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.

மாற்றுக்கருத்து இருந்தால் தெளிவாக மேற்கண்ட வசனங்களை ஆராய்ந்து விட்டு,  வசனத்தோடு கருத்தைப் பதிவிடுங்கள். வீண் விமர்சனங்களுக்கு, தனிப்பட்ட தாக்குதல்களுக்கு நான் பதிலளிப்பதில்லை.

- முகில் 

ஆன்லைன் ஆராதனைகள்

சபை ஆராதனைகளை லைவ் செய்வது, டெலிகாஸ்ட் செய்வது நிறுத்தப்பட்டால் தான் தேவனுடைய மகிமை சபைகளில் காணப்படும். சமீப நாட்களில் சபை ஊழியங்கள் ஆன்லைன் ஊழியங்களுக்காக பலிகடா ஆக்கப்படுகிறது.

நான் சொல்வது உங்களுக்கு பைத்தியமாகத் தெரியலாம். ஆனால் இது கடைக்கோடி விசுவாசிகள் ஒவ்வொருவரின் குமுறல். இதுவே உண்மை என்பதை இனி வரும் காலம் விளக்கும். 

ஆன்லைன் ஊழியங்கள் தனியாகவும், சபை ஊழியங்கள் தனியாகவும் இருக்க வேண்டும். காரணம் ஆன்லைன் எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைன் ஆகலாம். சபை கூடுகை என்பது அப்படியல்ல.

- முகில்

Thursday, February 25, 2021

ரகசிய வருகை என்னும் பிசாசின் உபதேசம் - தப்பித்துப் பறந்து போவதையா இயேசு சொல்லிக்கொடுத்தார்?

*"ரகசிய வருகை" என்னும் பிசாசின் உபதேசம் - தப்பித்துப் பறந்து போவதையா இயேசு சொல்லிக்கொடுத்தார்?*

இதைக் கொஞ்சம் படியுங்கள்.. ரகசிய வருகை இல்லை என்பதற்கான வசன ஆதாரங்கள்... 

1800களில் ஜான் டார்பி நெல்சனால் சபைக்குள் திணிக்கப்பட்டது தான் இந்த இரகசிய வருகை என்னும் கோட்பாடு. அதே காலகட்டத்தில் Milleric Movements என்று சொல்லப்படக்கூடிய  பல பிழையான உபதேசங்கள் சபைக்குள் திணிக்கப்பட்டது. ஆனால் அப்படி ஒரு உபதேசம் (Pre-Tribulation Rapture) வேதத்திலும் இல்லை, சபை சரித்திரத்திலும் 1800 வரை இல்லை. உபத்திரவம் முடிந்தவுடன் தான் இயேசுவினுடையவர்கள் அவரிடத்தில் கூட்டி சேர்க்கப்படுவார்கள். இது மத்தேயு 24ல் இயேசுவே சொன்னது. இதே சம்பவம், இயேசு சொல்லியிருக்கிறபடி அறுவடையின் உவமையாக வெளிப்படுத்தின விசேஷம் 14ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த உவமையை இயேசு தெளிவாக மத்தேயு 13ஆம் அதிகாரத்திலும் சொல்லியிருக்கிறார். "அறுப்பு உலகத்தின் முடிவு! அறுக்கிறவர்கள் தேவ தூதர்கள்" மத்தேயு 13:39.

மேகங்கள் மேல் இயேசு வர வேண்டும். பிறகு தான் சபை அவரிடத்தில் சேர்த்துக்கொள்ளப்படும். இதே சம்பவம் தான் வெளிப்படுத்தின விசேஷம் 7ஆம் அதிகாரத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டு பகுதிகளிலும், முந்திய வசனங்களில் இயேசு மேகங்கள் மேல் தோன்றுவதைப் பார்க்கமுடிகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 6:16,17 - பூமியில் உள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலப்புகிறார்கள்.. இதே சம்பவம் வேறு எங்காவது இருக்கிறதா? ஆம். இருக்கிறது. இயேசு சொன்னாரே... மத்தேயு 24:30ல் இரண்டு பகுதிகளிலும்

"பூமியில் உள்ள சகல கோத்திரத்தாரும்", "கண்டு புலம்புவார்கள்" என்பதும் ஒத்துப் போகிறது. இரண்டும் ஒரே சம்பவம் தான். வெளிப்படுத்தின விசேஷம் 14:14ல் மனுஷகுமாரன் மேகத்தில் தோன்றிய பிறகே அறுவடை நடக்கிறது! இதுவும் அதே சம்பவம் தான்.

திருடனைப் போல வருகிறேன் என்பதன் அர்த்தம் என்ன?

வேதமே இதற்கான அர்த்தத்தை விளக்குகிறது. 1 தெசலோனிக்கேயர் 5:1-8. வாசித்துப் பாருங்கள். திருடனைப் போல வருவது என்பது விழித்திராதவர்கள் மேல் சடுதியாக அவர் வருவது. விழித்திருந்தால் திருடன் எப்படி வர முடியும்? நமக்கோ அவர் திருடன் அல்ல. மணவாளன். திருடன் கொல்வான், அழிப்பான். மணவாளன் நம்மை நித்திய ஜீவனை தந்து நம்மை பரிபூரணப் படுத்த வருகிறவர் (யோவான் 10:10). இதைத் தனியாக விளக்கலாம்.

உபத்திரவத்தை சபை கடந்து செல்லும்போது, அது பாக்கியமாக என்னப்படுகிறது. இதை சபை சரித்திரம் நமக்குச் சொல்கிறது. உபத்திவம் நமக்குப் புதிதல்ல. அந்திகிறிஸ்துவும் நமக்குப் புதிதல்ல. யோவான் எழுதுகிறபடி அன்றைக்கே பல அந்திகிறிஸ்துக்கள் இருந்தார்கள். அக்கிரமத்தின் ரகசியமும் அன்றைக்கே கிரியை செய்திருக்கிறது. "தடை செய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுவது" என்பது சபை அல்ல. நடுவிலிருந்து நீக்கப்படுவது யார் என்பது வெளிப்படுத்தின 12ஆம் அதிகாரத்தில் இருக்கிறது. வான மண்டலங்களில் உள்ள அதிகாரத்தில் (நடுவில்) இருந்து தாழ விழத் தள்ளப்படுவது தான் அழிவின் முதல் அடி. தானியிலுடைய ஜெபத்தை வான மண்டலங்களில் இருந்து தடை செய்தவன் யார்? சிந்தித்துப் பாருங்கள். அவன் தான் நடுவிலிருந்து நீக்கப்பட வேண்டும். பிறகு, கொஞ்சம் காலம் உண்டென்று பூமியில் சில வேலைகளை, உலகத்தின் அரசாங்கத்தை தன் கையில் போட்டு சாத்தானால் செய்ய முடிகிறது. அப்போதும் வெற்றி நமதே! "மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். - வெளிப்படுத்தின விசேஷம் 12:11"

ஆனால் சில பிரசங்கியார்கள், சாத்தானை ஜெயிப்பதைக் கற்றுக் கொடுக்காமல், பிழையாக, தப்பித்து பறந்து போவதைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறார்கள். இது இயேசுவின் வார்த்தைகளுக்கு விரோதமானது. சாத்தானுடைய உபதேசம் தான் ரகசிய வருகை. இயேசு உலகத்தில் உபத்திரவ ம் உண்டு என்கிறார். மேலும் அவர் அதை ஜெயித்தார். நாமும் ஜெயிக்க அழைக்கப்பட்டோம். இவர்களோ, உபத்தரவத்தில் இருந்து சபை பறந்து போவதையே பேசிக்கொண்டிருக்கிறார்கள். பைபிள் படியுங்கள், ஆராய்ச்சி செய்து வேத வசனங்களை ஆதி அப்போஸ்தர்கள் புரிந்து கொண்ட விதமாகவே புரிந்து கொள்ளுங்கள்.. விழித்துக் கொள்வோம், இயேசு வருகிறார்.

கர்த்தராகிய இயேசுவே, வாரும்!

பின் குறிப்பு: வேதத்தை வேதமே விளக்க வேண்டும். வேறு யாரும் சொல்வதை விட, மாற்றுக் கருத்துக்கு வேத வசனைத்தையே ஆதாரமாகப் பதிவிடுஙகள்.

Tuesday, February 23, 2021

ரகசிய வருகை என்னும் மாபெரும் பிழை

 *ரகசிய வருகை என்னும் மாபெரும் பிழை*

அந்திக்கிறிஸ்துவின் உபத்திவ நாட்களுக்கு முன்பாக சபை எடுத்துக்கொள்ளப்படும் என்பது பிழையான உபதேசம். அப்படி வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. இவ்வளவு திரள் கூட்ட மக்களும் "ரகசிய வருகை" என்ற டார்பியின் கோட்பாட்டால் வஞ்சிக்கப்படுகிறார்கள். யாராவது வேதத்தை ஆராய்ந்து கேள்வி கேட்டிருக்கிறீர்களா? இந்த உபதேசத்தை நம்பும் ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் 100% வேத ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா?

இயேசுவுக்கு முன்பாக வருபவன் அந்திகிறிஸ்து. இவனை ஒருவேளை இரகசிய வருகை இயேசு என்று நம்பி வஞ்சிக்கப்பட  வாய்ப்பு இருக்கிறது. இயேசுவின் வருகையை கண்கள் யாவும் காணும் என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். நாம் கூட்டி சேர்க்கப்படும் நிகழ்வும் அதோடு சேர்த்தது என்பதையும் மத்தேயு 24ஆம் அதிகாரத்தில் இயேசு தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இது மட்டுமல்ல. இதோ இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று சொன்னால் நம்பக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறார்.

ரகசிய வருகையை போதிப்பவர்களும் நம்புகிறவர்களும் மீண்டும் ஒருமுறை வேதத்தை ஆராய ஒரு அழைப்பு விடுக்கிறேன், திறந்த மனதுடன். தயாரா?

- முகில்